போலீஸை கொல்ல முயன்ற மணல் கடத்தல் கும்பல்: டிடிவி தினகரன் கண்டனம்!

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மணல் கடத்திச் சென்ற லாரியை அந்தபகுதியை சேர்ந்த போலீஸ் தமிழ்ச்செல்வனும், ஊர்க் காவல் படை வீரர் வெங்கடேசனும் தடுக்க முயன்றுள்ளனர். அவர்கள் மீது மோதி விட்டு மணல் கடத்தல் லாரி தப்பிச் சென்றுள்ளது. இதில் காவலர் தமிழ்ச்செல்வனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஊர் காவல் படை வீரர் வெங்கடேசனும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது நடந்துள்ள கொலை முயற்சி சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் அருகே சட்ட விரோத நடைபெற்ற மணல் கடத்தலை தடுக்க முற்பட்ட காவலர்கள் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளை தொடர்பான பொதுமக்களின் புகார்களை அலட்சியமாக எதிர்கொண்டதாக குற்றம்சாட்டிய அவர், இதன் விளைவாகவே மணல் கொள்ளையை தடுக்க முயலும் காவலர்களையே கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிவகங்கை, அரியலூர் என பல்வேறு மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகவும், இதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “காவலர்களை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். இனிவரும் காலங்களில் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.