சமத்துவ உலகை நிறுவுவதே நமது தலையாய பணி: முதல்வர் ஸ்டாலின்!

இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்குகீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி. ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “புரட்டுக் கதைகளுக்கும் – வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!

இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம். ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி” எனப் பதிவிட்டுள்ளார்.