நீங்க பெரியாரின் பேரனா? ஈவிகேஸ் இளங்கோவனை விளாசிய எச்.ராஜா!

பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஈவிகேஸ் ‘நான் பெரியாரின் பேரன்’ என கூறிவிட்டு பெண் தலைவர்களின் காழ்ப்புணர்ச்சியை காட்டி இருப்பதாக விமர்சித்துள்ளார் பாஜகவின் எச்.ராஜா.

கிரீம் பன் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் குடும்ப உரிமையாளர் ஸ்ரீனிவாசன் பேச அந்த விவகாரம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனரான சீனிவாசன் நேரில் சந்தித்து பேசியதாகவும், அவர் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு தமிழகத்தில் இருந்தும் தேசிய அளவில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரத்தை முடித்துக் கொள்ள வேண்டுமென பாஜகவின் வானதி சீனிவாசனும், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனும் அடுத்தடுத்து அறிக்கை விட விவகாரம் சற்றே அடங்கியது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வரை இதைப் பற்றி பேசி வருகின்றனர்.

இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஸ் இளங்கோவன், “பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்.. ஆனால் இது எதுவுமே அவரிடம் இல்லை. அன்னப்பூர்ணா உரிமையாளர் ஜிஎஸ்டி யை முறைப்படுத்துங்கள் என சொன்னதற்கு, ஆளை வைத்து மிரட்டியும், போன் மூலம் மிரட்டியும், மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம்” என கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

‘அவர் பெண் அமைச்சர் ஆகவே அடக்கமாக இருக்க வேண்டும்” என்று கூறும் துணிவு உங்களுக்கு எப்படி வந்தது இளங்கோவன் அவர்களே? “நான் பெரியாரின் பேரன்” என்று கூறிக் கொள்ளும் நீங்கள், நமது நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து, இன்று நமது மத்திய நிதியமைச்சராக பொறுப்பிலிருக்கும் திருமதி.நிர்மலா சீதாரமன், அவர்களைப் பார்த்து, “பெண் அமைச்சருக்கு அடக்கமும் பணிவும் தேவை” என்று கூறியிருப்பது, பெண் தலைவர்களின் மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குகிறது. வெளிநாட்டிற்கு சென்றாலும் சரி, உள்நாட்டில் இருந்தாலும் சரி, நமது தாய் நாட்டையும் தாய் நாட்டுப் பெண்களையும் தொடர்ந்து அவமதிப்பதும், அவர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சிப்பதும் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் வாடிக்கையாகிவிட்டது. பெண்களைத் தங்கள் இஷ்டம் போல் நாகரிகமின்றி விமர்சிப்பது உங்கள் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.

அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெரும் தலைவர்களான, நமது பாரதப் பிரதமரும், செல்வி. ஜெயலலிதா அம்மையாரும் சந்தித்துக் கொண்டதைக் கொச்சைப்படுத்தி, தமிழக மக்களின் கடும் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டும் கூட உங்களுக்கு புத்தி வரவில்லையா? அதேபோல, கடந்த ஆண்டு உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த சேலம் மாநகராட்சி பெண் துணை மேயரை, “என்ன ரொம்ப அழகாயிட்ட வர” என்று துளியும் விவஸ்தையில்லாமல் பொதுவெளியில் மீண்டும் விமர்சித்தவர் தானே நீங்கள்?

இன்று மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு பெண் அமைச்சரைப் பற்றி சிறிதும் மாண்பற்ற விதத்தில் விமர்சிக்க துணிந்திருக்கும் உங்கள் குறுகிய சிந்தனை கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத நீங்கள், மக்களின் உரிமைகளைத் தீர்மானிக்கும் அரசியல் வாழ்க்கைக்கு சற்றும் அருகதையற்றவர். எனவே, தொடர்ந்து பெண்களை ஆட்சேபிக்கும் விதத்தில் விமர்சித்து வரும் நீங்கள், நமது மத்திய நிதியமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதுதான் ஒரு மூத்த அரசியல் தலைவருக்கான மாண்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.