இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் முன்னிலையில் இலங்கையின் 16-ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் நேற்று இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார். இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் மூத்த தலைவரும், பேராசிரியருமான ஹரிணி அமரசூரிய (54) பிரதமராக பதவியேற்றார். 1994-ல் இலங்கையின் பிரதமராக பதவியேற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க-வுக்குப் பிறகு அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக ஹரிணி பதவியேற்றுள்ளார். இவர் அந்நாட்டின் 3-வது பெண் பிரதமராவார். இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன, அதிபர் தேர்தலைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக ஹரிணி நியமிக்கப்பட்டுள்ளார்.

2020-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹரிணி அமரசூரிய, 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டார். அப்போது, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் ஹரிணிக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 2024 தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதை அடுத்து, முன்பு அறிவித்தபடி ஹரிணிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.