‘மெய்யழகன்’ படத்தில் நிறைய அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது: சூர்யா!

“மெய்யழகன்’ திரைப்படத்தில் நிறைய அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன” என்று நடிகரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பொதுவாக ஒரு திரைப்படம் நிறைய கணக்கீடுகள் மற்றும் நிறைய அன்புடன் உருவாக்கப்படுகிறது. ஆனால், அதிசயம் நிகழும் போது தான் ‘ப்யூர் சினிமா’ உருவாகும். அந்த வகையில் ‘மெய்யழகன்’ படத்தில் நிறைய அற்புதங்கள் நிகழ்ந்துள்ளதாக நினைக்கிறேன். படம் குறித்த உங்களின் அன்புக்கு நன்றி. இது அனைத்தும் இந்த ஸ்கிரிப்ட் புத்தகத்தில் இருந்து தொடங்கியது. பிரேம்குமார், அரவிந்த் சாமி, கார்த்தி, கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘96’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் இன்று (செப்.27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோவிந்த் வசந்தா படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சூர்யா – ஜோதிகா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.