அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்தது.

நாடு முழுவதும் சமீப காலமாக ரயில்நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து பல்கலைக்கழகத்துக்கு விரைந்த போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வளாகம்முழுவதும் தீவிர சோதனையிட்டனர். ஆனால், எந்த பொருளும் சிக்காததை அடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 12-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மிரட்டல் கும்பல் வெளிநாடுகளில் இருந்துகொண்டு செயல்பட்டு வருவதாகவும், அதுவும் ஒரேகும்பல்தான் இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர்களைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற மிரட்டல்புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.