மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் வசூலிக்கப்பட்ட புகார் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு சார்பில் தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி அளிக்கப்பட்டது. சட்டவிரோதமாக கட்சிகளுக்கு கருப்பு பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையை ஒழிக்கும் வகையில் இந்த புதிய நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனாலும் இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறிய உச்சநீதிமன்றம் அதனை சமீபத்தில் ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த நபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்கினர் என்ற விபரத்தை வெளியிட அதிரடியாக உத்தரவிட்டது. அதோடு தேர்தல் பத்திரம் முறைக்கு தடை விதித்தது.

இத்தகைய சூழலில் தான் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவினர் முறைகேடு செய்துள்ளனர். அச்சுறுத்தி பணம் வசூல் செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மத்திய அரசு மிரட்டி பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணத்தை நன்கொடை பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி இருந்தன. இந்நிலையில் தான் தேர்தல் பத்திரம் முறைகேடு, மிரட்டி பணம் பறித்ததாக பாஜக தலைவர்களுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் பத்திரம் நடைமுறைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தான் முக்கிய காரணம். தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்தது மத்திய நிதி அமைச்சகம் தான். இதனால் தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் பெங்களூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் அமைப்பை சேர்ந்த ஆதர்ஷ் அய்யர் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில் மத்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை, பாஜக தலைவர் ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான புகார் தொடர்பாக நிர்மலா சீதாராமன் உள்பட மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பெங்களூர் திலக் நகர் போலீசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் நிர்மலா சீதாராமனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.