வேட்டையன் உங்கள ஏமாத்தாது: ரஜினிகாந்த் நம்பிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கையில் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை எட்டவுள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக மட்டும் இல்லாமல், தொடர்ந்து மார்க்கெட் உள்ள நடிகராக இன்றைக்கும் உள்ளார். மாஸ் ஓப்பனிங், ரஜினியை நம்பி பணம் போட்டால் நிச்சயம் பைசா வசூல் என தயாரிப்பாளர்களுக்கு இன்றும் நம்பிக்கை கொடுத்துக் கொண்டு உள்ளார். இன்றைய சினிமா வசூலை வைத்துத்தான் என முடிவான பின்னர், தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் வசூல் லிஸ்ட்டில் தனது படங்களை வைத்துள்ளார். கடைசியாக இவர் கதாநாயகனாக நடித்த ஜெய்லர் படம் கிட்டத்தட்ட 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. வேட்டையன் படத்தில் இருந்து முதலில் வெளியிடப்பட்ட மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 28) சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதில், வேட்டையன் படம் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது. படம் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளிக்க ரஜினிகாந்த் மறுத்துவிட்டார். ரஜினிகாந்திடம், ஆன்மீகவாதியாக லட்டு சர்ச்சை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு, Sorry – நோ கமெண்ட்ஸ் என சொன்ன ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார்.