திராவிட இயக்கத்தின் 3வது குழல் விசிக: திருமாவளவன்

திராவிட இயக்கத்தின் 3வது குழல் துப்பாக்கி விசிக என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பவள விழாவை அக்கட்சி கொண்டாடி வருகிறது. திமுக பவள விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றும் பவள விழா பொதுக் கூட்டம் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த பொதுக் கூட்டத்தில் கி.வீரமணி, செல்வப்பெருந்தகை, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

திராவிட அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்றாவது குழல். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் வெற்றிகளை சாதித்து மிகப்பெரும் சாதனையாளராக இருக்கிறார். பதவிக்கான அரசியலை முதல்வர் செய்யவில்லை. அதனால்தான் நாள் ஒன்றுக்கு நூறு முறை இது திராவிட மாடல் அரசு என்று முழங்குகிறார்.

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை தான் கொண்டு வந்தேன் என்று கலைஞர் சொன்னார். அது மு.க.ஸ்டாலின் காலத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இரு மொழிக் கொள்கை, தமிழ்நாடு பெயர், சுயமரியாதை திருமணம் ஆகிய மூன்றுக்கும் எதிராக யாராவது பேச முனைந்தால் மக்கள் சார்பில் மிகப்பெரிய கிளச்சி ஏற்படும் என்று அண்ணா சொன்னார்.

தமிழ்நாட்டில் எந்த சக்தியாலும் மும்மொழிக் கொள்கையை திணிக்க முடியாது. தேசிய கல்வி கொள்கையை, மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் உள்ளார். இருமொழிக் கொள்கையில் இன்றும் திடமாக உள்ளது திமுக. இது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல. மு.க.ஸ்டாலினை குடும்ப வாரிசு என்கிறார்கள். அவர் திராவிடக் கருத்தியல் வாரிசு. பெரியார் வழியில் முதல்வர் தொடர்ந்து இயங்குகிறார்.

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற இரட்டை குழல் துப்பாக்கியோடு விசிக என்றென்றும் மூன்றாவது குழலாக இருக்கும். திமுகவுடன் இணைந்து சனாதன சக்தியை எதிர்க்க கரம் கோர்த்து முழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.