இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களது படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. நடுக்கடலில் கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக இந்தியா – இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்யும் போக்கு தான் பிரதானமாகி வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமான படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். அதாவது, 15 மீனவர்கள் மற்றும் 2 விசைப் படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதற்கிடையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகளை இலங்கை கடற்படை வெட்டி வீசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இலங்கை சிறையில் உள்ளவர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறது.

இதுதொடர்பாக கடிதங்களும் எழுதப்பட்டுள்ளன. மீனவர்கள் மீட்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதிய உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்து தர வேண்டியது அவசியமாகிறது. சமீபத்தில் தான் இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளது. அதுவும் கம்யூனிஸ்ட் சித்தாந்த பின்புலம் கொண்ட அதிபராக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றுக் கொண்டார். இவரது தலைமையின் கீழ் இந்தியா – இலங்கை நல்லுறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக மீனவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படாத அளவிற்கு தொலைநோக்கு பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.