மோடியை வீழ்த்தும் வரை சாக மாட்டேன்: மல்லிகார்ஜுன கார்கே!

காஷ்மீரில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்த காங்கிரஸ் தலைவர் கார்கே திடீரென உடல்நலக்குறைவால் மயங்கினார். இதையடுத்து மேடையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் கார்கே தனது பேச்சைத் தொடர்ந்தார். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை உயிருடன் இருப்பேன் எனச் சூளுரைத்தார்.

காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அங்குக் கடைசியாக 2014ல் தான் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அதன்படி பார்த்தால் 2019இல் சட்டசபைத் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், 2019ல் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அப்போது தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. மொத்தம் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் நிலையில் அக். 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அங்கே ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜக, காங்கிரஸ் என்று பல கட்சிகள் களத்தில் உள்ளனர்.

அங்கு ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தல் வரும் அக். 1ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அங்கு பல்வேறு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதன்படி இன்று காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பிரச்சாரம் செய்திருந்தார். காஷ்மீரில் உள்ள கதுவா என்ற பகுதியில் அவர் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அவர் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிக் கொண்டு இருந்தார். அந்த பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போதே கார்கே திடீரென மயக்கம் அடைந்தார். கார்கே பேச்சை நிறுத்திக் கொண்டு நிற்கவே சிரமப்படுவதைப் பார்த்த உடனேயே மேடையில் இருந்த மற்ற தலைவர்கள் ஓடிச் சென்று அவரை தாங்கிப் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், கார்கே தனது உரையைத் தொடர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்பட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் காங்கிரஸ் நிச்சயம் எடுக்கும். எனக்கு 83 வயதாகிறது, நான் சீக்கிரம் உயிரிழக்க மாட்டேன். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிருடன் இருப்பேன். இவர்களுக்கு (பாஜக) தேர்தலை நடத்த வேண்டும் என்றெல்லாம் விருப்பம் இல்லை. உண்மையில் தேர்தல் நடத்தும் எண்ணம் இருந்து இருந்தால் அதை சில ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கலாம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து வேறு வழியின்றியே இப்போது தேர்தலை நடத்துகிறார்கள். லெப்டினன்ட் கவர்னர் மூலம் ரிமோட் கண்ட்ரோல் அரசை நடத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களுக்காக எந்தவொரு விஷயத்தையும் செய்யவில்லை. அப்படி இருக்கும் போது அடுத்த 10 ஆண்டுகளில் மட்டும் அவர் என்ன செய்துவிடப் போகிறார். பாஜகவைச் சேர்ந்தவர்கள் யாராவது பிரச்சாரத்திற்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் எனக் கேளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.