வாரிசு அரசியல் பற்றி பாஜகவினர் பேசக்கூடாது: செல்வப்பெருந்தகை!

வாரிசு அரசியல் பற்றி பாஜகவினர் பேசக்கூடாது. பாஜக தலைவர்கள் 60 பேரின் வாரிசுகள் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில், இந்திரா தோழமை சக்தி இயக்கத்தின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

இந்திரா காந்தி பெயரில் செயல்படும் இந்திரா தோழமை சக்தி இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள பெண்கள் அரசியலிலும், கட்சியிலும் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயலாற்றி வருகிறது.

தமிழக துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், துணை முதல்வராகவும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறோம். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் சார்பில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

தேர்தல் பத்திரம் மூலம் பாஜக பெருமளவு நன்கொடை பெற்றது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். தற்போது, கட்டாயப்படுத்தி தேர்தல் நன்கொடை பெற்றதாக நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மை வெளிவந்தே தீரும்.

வெறுப்பு அரசியலை மக்கள் வேடிக்கைப் பார்க்கமாட்டார் கள். இந்தியாவில் அரசியல் ரீதியாக பழிவாங்கும் போக்கை அனைத்து அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். காமராஜர் ஆட்சிக் காலத்தில் இருந்த நாகரீகம் இப்போது வரவேண்டும். வாரிசு அரசியல் பற்றி பாஜகவினர் பேசக்கூடாது. பாஜக தலைவர்கள் 60 பேரின் வாரிசுகள் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடக்கூடாது. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.