நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவன பெயரில் மோசடி!

நடிகர் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அவர் தயாரித்த ‘கொட்டுக்காளி’ ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து மேலும் சில படங்களைத் தயாரிக்க இருக்கிறார். இதற்கிடையே அவரது தயாரிப்பு நிறுவனப் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதை நம்ப வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்த திரைப்படத்துக்கும் ‘காஸ்டிங் ஏஜென்ட்டுகள்’ நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக வெளிவரும் மின்னஞ்சல்கள், செய்திகள், சமூக வலைதளப் பதிவுகளை நம்ப வேண்டாம். சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.