திருமாவளவன் இப்படி பேசுவார்னு நினைக்கவே இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்!

தன்னைப் பற்றி திருமாவளவன் பேசியதற்கு தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு உளுந்தூர் பேட்டையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு விசிகவிலேயே ஆதரவு இல்லை என்று தெரிவித்தார். அதேபோல காந்திக்கு அஞ்சலி செலுத்தாமல் காமராஜருக்கு மட்டும் அஞ்சலி செலுத்திவிட்டு திருமாவளவன் சென்றுள்ளார் என்ற தமிழிசை, “மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர் ஏன் காந்தியை தவிர்த்தார்? ஒருவேளை நம் கொள்கைக்கு காந்திக்கு எல்லாம் மாலை போடக்கூடாது என்ற குற்ற உணர்வின் காரணமாக தவிர்த்து இருக்கலாம்” என்று விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு மதுவிலக்கு மாநாட்டு மேடையில் காட்டமாக பதிலடி கொடுத்த திருமாவளவன், “காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், காந்தி சிலைக்கு ஆளுநர் அஞ்சலி செலுத்திய பிறகே, அஞ்சலி செலுத்த முடியும் என்று போலீசார் கூறிவிட்டனர். எனக்கு மாநாட்டிற்கு வேறு நேரமாகிவிட்டதால் காந்திக்காக வாங்கிய மாலையையும் சேர்த்து காமராஜருக்கே அணிவித்துவிட்டு கிளம்பினேன். ஆனால், எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது போல முன்னாள் ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார். தமிழிசைக்கு குடிப் பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். தமிழிசை போலவே எனக்கும் குடிப் பழக்கம் இல்லை” என்று ஆவேசமாக பேசினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவினர், தமிழிசையை அவமதித்ததற்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருமாவளவன் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இதுவரை மதுவிலக்கு கொள்கையை விசிக எடுத்து வரவில்லை. தற்போது அரசியல் சார்ந்து சுய நலத்திற்காக மதுவிலக்கு பற்றி பேசுகிறீர்களே என்ற அர்த்தத்தில் தான் நான் பேசினேன். எனது அரசியல் வாழ்க்கையில் எந்த தனிநபர் தாக்குதலையும் நடத்தியதே கிடையாது. நாகரீகமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், என்னை போன்றவர் மீது மோசமான தாக்குதலை திருமாவளவன் நிகழ்த்தியுள்ளார். திருமாவளவன் நாகரீகமான அரசியல்வாதி என நினைத்துக் கொண்டு இருந்தேன். அவரிடம் இருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.