ரஜினி நலமுடன் வாழ இறைவன் அருள் கிடைக்கட்டும்: இளையராஜா

“ரஜினிகாந்த் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும்” என இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை(இன்று) வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக…’’ என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் 3 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். நேற்று இரவு 11 மணி அளவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவர் குணமடைய வேண்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆலயங்களில் அவரது ரசிகர்கள் அனைவரும் சிறப்பு பூஜை செய்தனர். இந்நிலையில் அவர் வீடு திரும்பி உள்ள செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.