தமிழகத்தை விளையாட்டுத் துறையின் தலைநகராக மாற்றுவோம்: உதயநிதி!

இந்திய ஒன்றியத்தில் நம்முடைய விளையாட்டுத் துறையின் தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

முதலமைச்சர் கோப்பை-2024க்கான மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள 33,000 நபர்கள் முதலமைச்சர் கோப்பை-2024 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்படுகின்றன. மொத்தம் 35 வகையான விளையாட்டுக்கள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

துணை முதலமைச்சர் ஆன பிறகு அந்த பொறுப்பை ஏற்ற பிறகு நான் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கானது தான். இதற்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவதற்கான கோப்பில் தான் முதலில் கையெழுத்திட்டேன் என்பதை இங்கே பெருமையோடு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். விளையாட்டில் சாதிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்று பதக்கங்களை குவித்து வரும் தங்கை துளசிமதி முருகேசனுக்கு பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி வென்றதற்காக நம்முடைய கழக அரசு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ரூ.2 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கி பெருமைப்படுத்தினார்கள். அதே போல திருவாரூரை சேர்ந்த தடகள வீரர் தம்பி பிரவீன் சித்ரவேல் அவர்களும் இங்கு வருகை தந்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு மாநிலம் சிறந்து விளங்கும். ஆனால் இந்தியாவிலேயே அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற மாநிலம் எதுவென்றால் அது நம்முடைய தமிழ்நாடு தான். குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு துறை செய்கின்ற அந்த சாதனைகள் மகத்தானவை. அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள். அதனால் தான் இந்த ஆண்டு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்த போட்டிகள் நடத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்கள். அது மட்டுமல்ல, இந்த விளையாட்டு போட்டிக்கான பரிசுத்தொகை மட்டுமே ரூ.37 கோடி என்பதை இங்கே பெருமையோடு நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இந்தியாவிலேயே இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, வருடா வருடம் ஒரு விளையாட்டு போட்டிகளை நடத்துகின்ற ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மட்டும் தான். குறிப்பாக உங்களுடைய கோரிக்கைகளை ஏற்று இந்த வருடம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்து, கேரம், செஸ், வாள்வீச்சு, ஜூடோ, குத்துச்சண்டை கோ-கோ, டிராக், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ் போன்ற புதிய விளையாட்டுகளையும், இந்தாண்டு சேர்த்து இருக்கிறோம்.

சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து தங்கை துளசிமதி முருகேசன் உட்பட 6 மாற்றுத்திறனாளி வீரர்கள் சென்றார்கள். அவர்களுக்கு தலா ரூ.7 லட்சம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ஊக்கத் தொகையாக விளையாட்டு போட்டிக்கு முன்னதாக, அவர்கள் செல்வதற்கு முன்பாகவே நம்முடைய முதலைமைச்சர் அவர்கள் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள். அங்கு சென்ற 6 பேரில் 4 பேர் பதக்கங்களோடு திரும்பி வந்து தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார்கள். அவர்களுக்கு ரூ.5 கோடி அளவுக்கு நம்முடைய முதலமைச்சர் உயரிய ஊக்கத் தொகை வழங்கினார்கள். இதே போல ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற நம்முடைய தமிழ்நாட்டு வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, ஸ்ரீநாத் நாராயணன் போன்ற வீரர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு கோடி அளவுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கினார்கள்.

ஒரு பக்கம் நம்முடைய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பல்வேறு சர்வதேச போட்டிகளை தமிழ்நாடு அரசு நடத்தி நம்முடைய அரசு சாதனை படைத்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் அண்மையில் நீங்கள் எல்லாம் ரசித்த சென்னை பார்முலா 4 சாலை இரவு நேர கார்பந்தயம். தெற்காசியாவில் முதன்முறையாக நடைபெற்ற அந்த போட்டியை இந்த உலகமே பார்த்து வியந்து பாராட்டியது. அது மட்டுமில்லாமல் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு, சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ், ஆசிய கோப்பை ஹாக்கி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, சர்ஃபிங் லீக், சைக்ளோத்தான் இப்படி நாம் நடத்திய போட்டிகள் ஏராளம். இந்த சாதனை பயணம் எப்பொழுதும் தொய்வின்றி தொடர இங்கே வந்து இருக்கக் கூடிய உங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் மிக முக்கியம். நீங்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல. எதிர்காலத்தில் பல தேசிய, மாநில அளவிலான போட்டிகளிலும் விளையாட போகின்ற எதிர்காலத்தினுடைய, நம்ம நாட்டினுடைய வீரர்கள். எனவே உங்க அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்திய ஒன்றியத்தில் நம்முடைய விளையாட்டுத் துறையின் தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்குவோம். களம் நமதே. இவ்வாறு அவர் பேசினார்.