‘தங்கலான்’ படத்தை தடை செய்யக் கோரி வழக்கு!

கடந்த ஆகஸ்ட் மாதம் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘தங்கலான்’. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசான இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ‘தங்கலான்’ படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விக்ரம், பா. ரஞ்சித் கூட்டணியில் ‘தங்கலான்’ படம் உருவானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கப்பட்டது. விக்ரம், பா. ரஞ்சித் இருவரின் கெரியரிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருட் செலவில் இப்படம் உருவானது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியிருந்து.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘தங்கலான்’. விக்ரமுடன் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகியிருந்த வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்து மாஸ் காட்டியது தங்கலான். தமிழ்நாட்டை தாண்டி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தங்கலானுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதனால் அங்கு அதிக வசூலை குவித்தது.

‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் இன்னமும் ஓடிடியில் வெளியிடப்படவில்லை. இதனால் இப்படத்தின் ஓடிடி ரிலீசுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தை ஓடிடியில் வெளியிட தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். ‘புத்த மதம் குறித்து புனிதமாகவும், வைணவம் பற்றி நகைச்சுவையாக சித்தரிக்கும் விதமாகவும் படத்தில் காட்சிகள் உள்ளன. இதனால் ‘தங்கலான்’ ஓடிடியில் வெளியானால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனால் ‘தங்கலான்’ படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது மேலும் தள்ளிப்போகும் என தெரிகிறது. இந்த விஷயத்தால் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.