ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வெற்றி!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. வெற்றிக்கு 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில் காலை 10 மணிக்குப் பின்னர் தேர்தல் முடிவுகளின் போக்கு மாறியது. தற்போதைய நிலவரப்படி பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், 6 இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன. 46-ஐ கடந்து முன்னிலை பெறும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்ற நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் கொண்டாட்டத்தில் உள்ளது.

இந்தச் சூழலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் தோற்கடித்துள்ளார். ஜூலானா தொகுதியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார் வினேஷ் போகத். இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவரது உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது தேசமே அவருக்கு ஆதரவாக நின்றது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார். அவருக்கு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கியது.