சாம்சங் நிறுவனத்தின் கையாளாக தமிழக அரசு: அன்புமணி கண்டனம்!

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போராட்ட பந்தல் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர்கள் அன்பரசன், டிஆர்பி ராஜா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிஐடியு தொழிற்சங்க பதிவை தவிர மற்ற கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு பிரிவு தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதாக உறுதியளித்த நிலையில், சிஐடியு மட்டும் போராட்டத்தை தொடர்வதாகவும், அவர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக போராட்ட குழுவினர் அமைத்திருந்த பந்தலை போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது. மேலும் சாம்சங் தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்வதாகவும், பேருந்துகளில் செல்பவர்களையும் தடுத்து விதிகளை மீறி கைது செய்யப்படுவதாக வீடியோக்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்வதற்காக வந்த நிலையில் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து தடையை மீறி அவர்கள் பேரணியாக சென்ற நிலையில் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போராட்ட பந்தல் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதன் மூலம் திராவிட மாடல் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமாகியுள்ளதாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் போராட்ட பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது தான் தங்களின் முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய தமிழக அரசு, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை கண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு பொம்மை தொழிற்சங்கத்தை உருவாக்கி சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்த அரசு, அதற்கு உடன்படாத தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பதும், தொழிலாளிகளின் நலன் குறித்து அது ஒருபோதும் கவலைப்படாது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசின் இந்த அடக்குமுறையையும், துரோகத்தையும் தொழிலாளர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. மக்கள்விரோத அரசுக்கு தொழிலாளர்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.