இளைஞர்களுக்கு வேலை இல்லாதபோது ராமரை பற்றி மட்டும் பேசி எந்த பயனும் இல்லை: உத்தவ் தாக்கரே

நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லாதபோது ராமரை பற்றி மட்டும் பேசி எந்த பயனும் இல்லை என்று, உத்தவ் தாக்கரே கூறினார்.

ராணுவத்தில் ஆள் சேர்ப்பு தொடர்பாக மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிவசேனாவின் நிறுவன நாள் தின விழாவில் மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இதுகுறித்து பேசியதாவது:-

எந்த அர்த்தமும் இல்லாத திட்டங்களுக்கு அக்னிவீர், அக்னிபாத் போன்ற பெயர்கள் வைப்பது ஏன்?. 17 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்களுக்கு அந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன கிடைக்கும்? நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுப்பது ஆபத்தானது. இளைஞர்களின் லட்சியம் மற்றும் வாழ்க்கையுடன் விளையாடுவது மிகவும் தவறானது. நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லாதபோது ராமரை பற்றி மட்டும் பேசி எந்த பயனும் இல்லை. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாட்டில் சில பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் நடந்தாலும், மராட்டியம் அமைதியாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்தும் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன. விவசாயிகள் வீதியில் இறங்கி போராடினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.