மேற்கத்திய படங்களை கொண்டாடுகிறோம், ஆனால்..: ஜான்வி கபூர்!

“மேற்கத்திய படங்களை மேலே தூக்கி வைப்பதிலும், நம்முடைய சொந்த நாட்டிலிருந்து வரும் விஷயங்களை தகுதியற்றது என்று கூறி கீழே தள்ளுவதிலும் நாம் ஏன் முனைப்புடன் இருக்கிறோம்” என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

டிசம்பர் 5-ம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2’. அதே தினத்தில் கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லார்’ படமும் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐமேக்ஸ் திரையரங்குகள் எதுவுமே ‘இன்டர்ஸ்டெல்லார்’ படத்துக்கு கிடைக்கவில்லை. அனைத்துமே ‘புஷ்பா 2’ படத்துக்கு ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக பலரும் எதிர்மறையாக கருத்துகள் தெரிவித்து வந்தார்கள். ஒரு கமர்ஷியல் படத்துக்கு அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளா என்ற ரீதியில் கருத்துகள் அமைந்தன.

இப்பிரச்சினைக்கு கருத்து தெரிவிக்கும் விதமாக ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “’புஷ்பா 2’ படமும் சினிமாதான். மேற்கத்திய படங்களை மேலே தூக்கி வைப்பதிலும், நம்முடைய சொந்த நாட்டிலிருந்து வரும் விஷயங்களை தகுதியற்றது என்று கூறி கீழே தள்ளுவதிலும் நாம் ஏன் முனைப்புடன் இருக்கிறோம்.
இதே வேரூன்றிய படைப்புகளை மற்ற நாடுகள் பாராட்டி, நம்முடைய சினிமாக்கள் குறித்து வியக்கின்றன. ஆனால் நாமோ வெட்கப்படுவது வருத்தமான விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில் 500 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனை புரிந்துள்ளது ‘புஷ்பா 2’. விரைவில் இந்தியளவில் அதிக வசூல் செய்த படமாக ‘புஷ்பா 2’ அமையும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.