ஜோர்டனில் குளோரின் நிரப்பப்பட்ட டேங்கர் வெடித்து சிதறியது: 12 பேர் பலி!

ஜோர்டனில் குளோரின் நிரப்பப்பட்ட டேங்கர் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட வாயு கசிவில் மூச்சுத் திணறி 12 பேர் பலியாகினர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஜோர்டனின் அகபா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் கிரேன் மூலம் குளோரின் நிரப்பப்பட்ட டேங்குகள் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன. அப்போது திடீரென கிரேன் செயலிழந்ததை அடுத்து டேங்க் ஒன்று மேலிருந்து கப்பலின் மீது விழுந்து வெடித்து சிதறியது. குளோரின் நிரப்பப்பட்ட டேங்கர் வெடித்து சிதறியதால் அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் நச்சு புகை வெளியேறியது. இதில் மூச்சுத் திணறி கப்பல் பணியாளர்கள் 12 பேர் பலியாகினர். மூச்சுத் திணறலுடனும், படுகாயங்களுடன் 250 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

டேங்குகள் வெடித்து குளோரின் வாயு கசிந்துள்ளதையடுத்து, அகபா துறைமுகத்துக்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் உள்ள அகபா நகரவாசிகள் தங்களது குடியிருப்புகளில் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகபாவின் தெற்கு கடற்கறையில் இருந்து பொதுமக்கள் வெறியேற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பு துறை சிறப்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் முடுவிடப்பட்டுள்ளதாக ஜோர்டன் அரசு தெரிவித்துள்ளது.