உத்தரகாண்டில் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் கடந்த 26-ந் தேதி வரை சார்தாம் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி புனிதத் தலங்களுக்கு சார்தாம் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு சார்தாம் யாத்திரை கடந்த மே 3-ந் தேதி அக்‌ஷய திருதியை அன்று தொடங்கியது. மலைப்பகுதியில் கடினமான வானிலையில் நடைபெறும் இந்த யாத்திரையின்போது பக்தர்கள் பலர் உயிரிழப்பது வழக்கமாக இருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டு உத்தரகாண்ட் மாநில நிர்வாகத்தின் சார்பில் இந்த ஆண்டு, யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும், கடுங்குளிர், உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த 26-ந் தேதி வரை 203 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்றும், மாரடைப்பு காரணமாக பலர் இறந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் மாநில சுகாதார மந்திரி தன்சிங் ராவத் கூறியுள்ளார்.