துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது: அமைச்சர் கோவி.செழியன்!

தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில், தமிழக ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

தஞ்சாவூர் அருகே ராராமுத்திரக்கோட்டையில் புதிய ரேஷன் கடை திறப்பு விழாவில் நேற்று பங்கேற்ற அமைச்சர் கோவி.செழியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான விவகாரத்தில், தமிழக ஆளுநரின் செயல்பாட்டை நாடே உற்றுநோக்குகிறது. ஆளுநரின் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆளுநரின் செயல்பாடுகள் அவற்றுக்கு மாற்றாக உள்ளன. இதனால் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. துணை வேந்தர் நியமனத்தில் 3 உறுப்பினர்கள் தேர்வுக் குழு என்பதை 4-ஆக அதிகரிப்பதன் மூலம், நியமனத்தை தடுப்பதுதான் ஆளுநரின் நோக்கமாக உள்ளது. இது நிச்சயம் நிறைவேறாது. முறைப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, துணைவேந்தர் நியமனம் நடைபெறும். மாணவர்கள் நலனில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கிற, செயல்படுகிற முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.