வெங்கைய நாயுடுவுக்கு நேரில் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கியுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து புத்தகம் பரிசளித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெங்கைய நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். “குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பல ஆண்டுகள் நம் நாட்டுக்காகத் தாங்கள் தொண்டாற்ற வேண்டும் என்று விழைகிறேன். நேர்மையும், ஆழ்ந்த அறிவும், எத்தகைய சூழலிலும் சிறிது நகைச்சுவை நயமும் நிறைந்த தங்களது புகழ்மிக்க வாழ்க்கையானது பொதுவாழ்வில் இருக்கும் எங்கள் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.