ரூ.10 கோடியில் சாரண இயக்க தலைமை அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் ரூ.10 கோடியில் சாரண இயக்க தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பாரத சாரண சாரணியர் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பெருந்திரளணி திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் கடந்த ஜன. 28-ம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றம் நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் சாரண, சாரணியர் பங்கேற்று, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த பெருந்திரளணி முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், முகாம் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, விழா மலரை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் 12 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 80 லட்சம் பேர் சாரண சாரணியர் இயக்கத்தில் உள்ளனர். அதாவது, 8-ல் ஒரு பங்கு நாம் இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் தமிழகத்தின் பங்கு என்பது அதிகமாகத்தான் இருக்கும். இந்தியாவில் 18 பெருந்திரளணிகளும், 5 சிறப்பு பெருந்திரளணிகளும் நடந்துள்ளன. 2000-வது ஆண்டில் சாரணர் இயக்கப் பொன்விழா பெருந்திரளணியை அப்போதைய முதல்வர் கருணாநிதி நடத்தினார். வைரவிழா கொண்டாடும்போது நான் முதல்வராக இருக்கிறேன். பள்ளி மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சாரணர் இயக்கத்தில் சேர்க்கும் வகையிலும், மேலும் பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாகவும் தமிழக சாரண இயக்கத்துக்கான புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும்.

நம் நாடு ஒற்றுமையால்தான் விடுதலை பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அனைவரும் சமம் என்ற உணர்வுடன், ஒற்றுமையாகப் போராடியதால்தான் விடுதலை கிடைத்தது. அந்த ஒற்றுமை உணர்வை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது. மானுட தத்துவத்தால் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளமும் நமக்கு இருக்க வேண்டும். கூடாரங்கள் தனித்தனியாக இருக்கட்டும். ஆனால் உள்ளம் ஒன்றாக இருக்கட்டும் என்று சொல்வார்கள். அப்படி, எங்கிருந்தோ வந்து ஒன்றாகத் தங்கிய நீங்கள் எல்லோரும் இங்கிருந்து பிரிந்து சென்றாலும், உள்ளத்தால் ஒருவர் என்ற உணர்வோடு செல்லவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், சிவ.வீ.மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி செழியன், டி.ஆர்.பி.ராஜா, எம்.பி. துரை.வைகோ, சமூகநலத் துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், கல்வித் துறைச் செயலர் மதுமதி, சாரணர் இயக்க முதன்மை தேசிய ஆணையர் கே.கே.காந்தேல்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, முகாமுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சாரண சாரணியரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சாரண, சாரணியர் இயக்க விழிப்புணர்வு கையெழுத்துப் பலகையில் கையெழுத்திட்டு, இயக்கத்தை தொடங்கிவைத்தார்.