மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில், இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, ரூ.1 லட்சத்து 16 கோடியே 514 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிக்னல், தொலைதொடர்பு துறை, தண்டவாளம் மேம்பாடு உட்பட பல பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில், தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009–14-ம் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது 7.5 மடங்கு அதிகமாகும். முந்தைய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2014-ல் இருந்து 1,303 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 2,242 கி.மீ. தொலைவு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. மேலும், 22 ரயில் பாதை திட்டங்கள் ரூ.33,467 கோடியில் நடைபெறுகின்றன.
இதுதவிர எழும்பூர், மதுரை, ராமேசுவரம் உட்பட 5 ரயில் நிலையங்களை ரூ.1,896 கோடியில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர, அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ், 77 ரயில் நிலையங்கள் ரூ.2,948 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 8 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில்களையும் இயக்கி வருகிறோம். வரும் 4 முதல் 5 ஆண்டுகளில் புதிய தண்டவாளங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் நடைபெறும் திட்டங்களுக்கு 3,389 ஹெக்டர் நிலம் தேவை. இதுவரை 25 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ரயில்பாதை திட்டங்களை விரைந்து முடிக்க மாநில அரசின் ஆதரவு தேவை.
இந்த பட்ஜெட்டில் 50 புதிய நமோ பாரத் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பட்ஜெட்டில் 100 புதிய அம்ரித் பாரத் ரயில்கள், 200 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ரூ.40,000 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, கேரளாவுக்கு ரூ.3,042 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.7,564 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் கூறும்போது, “சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது புதிய ரயில் பாதை பணி, அடுத்த 2 மாதங்களில் முடியும். அதுபோல, 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. ரயில் விபத்துகளை தவிர்க்க, 1,460 கி.மீ. தொலைவுக்கு ‘கவச்’ தொழில்நுட்பம் நிறுவ திட்டமிட்டப்பட்டது. முதல்கட்டமாக, 601 கி.மீ. தொலைவுக்கு பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார். சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.