புதுச்சேரிக்கு இருக்கும் நிதி பிரச்சினை தொடர்பாக பத்திரிகையாளர்கள் தொடர் கேள்வி எழுப்பியதால், `தமிழக ஸ்டைலில் பேசட்டுமா’ என்று பாதியிலேயே மத்திய அமைச்சர் எல்.முருகன் புறப்பட்டார்.
புதுச்சேரிக்கு இன்று வந்த மத்திய இணை அமைச்சர் முருகன் புதுச்சேரியை சேர்ந்த தவில் கலைஞர் தஷ்ணாமூர்த்தி இசை பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளதால் அவரை கவுரவித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் எல். முருகன் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சக நேரடி பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 3,432 கோடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜிப்மருக்கு ரூ. 1450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 150 கோடி உட்கட்டமைப்பை மேம்படுத்த தரப்படும். விவசாயிகள் கிசான் கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை 16 ஆயிரம் விவசாயிகள் புதுச்சேரியில் பெறலாம். குடிநீர் மேலாண்மை திட்டத்துக்கு ரூ. 186 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 லட்சம் ரூபாய் வரை வரிகட்டவேண்டியதில்லை.
தமிழகத்தில் கடந்த 2014க்கு முன்பாக ரயில்வேக்கு ரூ. 800 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு ரூ. 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறோம். புது ரயில்பாதை ஒதுக்குகிறோம். கன்னியாகுமரி உட்பட பல ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. தமிழக அரசு ஒத்துழைப்பு தந்து நிலங்களை கையகப்படுத்தி தரவேண்டும்” என தெரிவித்தார். மேலும் மத்திய அரசு பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை அவர் பட்டியலிட்டார்.
புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 1.46 சதவீதம் அளவே அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர புதிய திட்டங்கள் ஏதும் இல்லையே என்று கேட்டதற்கு, “புதுச்சேரி அரசுக்கும், ஜிப்மருக்கும் நிதி ஒதுக்கீடு தந்துள்ளோம். செயல்திட்டம் அறிவித்துள்ளோம். இதன்பிறகு துறைகள் வாரியாக திட்டங்கள் தரப்படும். மத்திய அரசு 90 சதவீத மானியம் புதுச்சேரிக்கு தருகிறது. வேண்டியதை புதுச்சேரிக்கு தர தயாராக இருக்கிறோம்” என்றார்.
புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்கவில்லையே, நிதி நெருக்கடியில் உள்ளதே என்று கேட்டதற்கு, “புதுச்சேரிக்கு நிதி நெருக்கடி இல்லை. அனைத்து உதவியும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் முழுமையாக செய்கிறார்கள். பாரபட்சமின்றி நிதி தருகிறோம்” என்றார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மட்டும் நிதி கமிஷனில் சேர்க்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, “ஆர்டிக்கிள் 370-ஐ எடுத்தவுடன் நிதி கமிஷனில் சேர்த்தோம். இங்கு அடிப்படை வசதி உள்ளது. புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்ப்பது பற்றி நிதி அமைச்சரிடம் தெரிவிக்கிறோம். அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்கும் வகையில் நிதி ஒதுக்கியுள்ளோம். மக்களுக்கு உபயோகமான பட்ஜெட் இது” என்றார்.
தொடர்ந்து புதுச்சேரி பிரச்சினைகள் தொடர்பாக கேள்விகளை எழுப்பியவுடன், “பட்ஜெட் நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள். புதுச்சேரிக்கு திட்டம், நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். தேவைகள் இருந்தால் ஆளுநர், முதல்வர் தரும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்” என்றார். புதுச்சேரிக்கு ரூ. பத்தாயிரம் கோடி கடன் உள்ளதே அதற்கு வட்டிகட்டவே இத்தொகை போதாது என்று கேட்டதற்கு, “தமிழக ஸ்டைலில் பேசட்டுமா” என்று கூறி பாதியிலேயே புறப்பட்டார்.