‘தமிழகம் முழுக்க திமுகவுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்’ என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி பகிர்ந்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வரின் உழைப்புக்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!
குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு ‘தோல்விசாமி’ இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்து கொண்டார்.
வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் தமிழக முதல்வர். அதன் காரணமாக இன்று ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; “Pro Incumbency” தான் எங்கும் எதிரொலிக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக் கொண்டிருகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.