தர்மேந்திர பிரதான் பேச்சு ஒரு பிளாக் மெயில்: திருமாவளவன்!

தேசிய கல்வி கொள்கை தொடர்பான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு விருப்பமின்றி உள்ளது. ஆனால் மத்திய அரசோ, புதிய கல்வி கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும் என்று இதுநாள் வரை மறைமுகமாக கூறி வந்தது. அதற்காக பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால் திமுக அரசு சற்றும் தயங்காமல், மத்திய அரசை சமாளித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தி பிரதான் கூறிய கருத்து தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதாவது புதிய கல்வி கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றால் தான் மத்திய அரசு நிதியை விடுக்கும் எனவும் இல்லையென்றால் நிதி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வருகின்றனா்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மத்திய அரசின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதிர்ச்சியான பேட்டி ஒன்றை கொடுத்து உள்ளார். தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு வெறுப்புணர்வை கொண்டு இருக்கிறார் என்பதை அது உணர்த்துகிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு விமர்சனத்துடன் அணுகுகிறது. இன்றைய நிலைப்பாட்டில் அவர் இருப்பது கண்டிக்கத்தக்கது. தேசிய கல்வி கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்துவது வேறு. அதுதொடர்பான விவாதம் வேறு. ஆனால் அதற்காக கல்வி திட்ட நிதியை நிறுத்தி வைப்பது ஒரு பிளாக் மெயில் நடவடிக்கை ஆகும்.

இந்த போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் சரியான நேரத்தில் மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன். திமுக கூட்டணி இதுகுறித்து விரைவாக விவாதிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்க முடியாது என்பதை தான் திமுக அரசு சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.