சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை, கொளத்தூர், பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு ‘பெரியார் அரசு மருத்துவமனை’ என்று பெயர் சூட்டிட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இம்மருத்துவமனை விரைவில் தமிழ்நாடு முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் 8.3.2023 அன்று மூன்று தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்காக கூடுதலாக மூன்று தளங்களுடன் விரிவாக்கம் செய்திட 7.3.2024 அன்று முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மொத்தம் ஆறு தங்களுடன் கட்டப்பட்டுள்ள இப்புதிய மருத்துவமனையின் தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகள், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, அறுவை அரங்கங்கள், நவீன இரத்த வங்கி, இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், மூன்றாம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்ப கட்டுப்பாடு வார்டு, நான்காம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, ஐந்தாம் தளத்தில் இருதயவியல் பிரிவு, அறுவை அரங்கங்கள், தோல்நோய் வார்டு, ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய மருத்துவமனையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை, கொளத்தூர், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பகிர்ந்த பணியிட மையம் மற்றும் மாணவர்களுக்கான ‘கல்வி மையம்’ உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்திற்கு மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2025) நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு படிக்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பகிர்ந்த பணியிடத்தில் பணிபுரிவோர்களிடம் உரையாடி, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் இணைந்து 2.85 கோடி ரூபாய் செலவில் பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் ‘Co-working Space’ மற்றும் மாணவர்களுக்கான ‘கல்வி மையம்’ என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை தமிழக முதல்வர் 4.11.2024 அன்று திறந்து வைத்தார்.
முதல்வர் படைப்பகத்தில் UPSC, TNPSC போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள், படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், மாணவர்கள் எந்த இடையூறுமின்றி படிக்கும் வகையில் அமைதியான சூழலும், நீண்ட நேரம் படிப்பதற்கு உகந்த இருக்கைகள், கணினி மற்றும் இணையதள வசதியும் செய்து தரப்பட்டுள்ளன. இக்கல்வி மையத்தில் தினமும் சுமார் 100 மாணவ, மாணவியர்கள் படித்து பயன்பெற்று வருகின்றனர்.
அத்துடன், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தொழில் தொடங்கிட இயலாத பெண்களுக்கும். ஆண்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பணி செய்வதற்காக ஒரு தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் சுமார் 40 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, டாக்டர் கலாநிதி வீராசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.