அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை!

வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து குவித்ததாக கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (பிப்.25) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் அம்மன் கே.அர்ச்சுனன். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர் கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளார். இதற்கு முன்பு 2016-21 காலகட்டத்தில் கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி. எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் சுண்டக்காமுத்தூர் சாலை மூன்றாவது வீதி, திரு நகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் கூடுதல் எஸ்பி திவ்யா தலைமையிலான கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டிற்கு வந்தனர். வெளியாட்கள் உள்ளே நுழையவும், வீட்டில் இருப்பவர்கள் வெளியே செல்லவும் தடை விதித்தனர். வீட்டிலிருந்து அம்மன் கே.அர்ச்சுனனிடம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் உங்களது வீட்டில் சோதனை நடத்த வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸார் சோதனைக்கு நடத்துவதற்கு அவரும் ஒத்துழைத்தார் .

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரது வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினர் . வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்தனர். சோதனை குறித்து தகவல் அடைந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து அவரது வீட்டுக்கு முன்பு குவிந்தனர். இவரது வீட்டு முன் பகுதியில் உள்ள ஒரு அறையில் தனி அலுவலகமும் உள்ளது, அங்கும் போலீஸார் சோதனை நடத்தினர்.

முன்னதாக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுனன் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று வழக்கு பதிந்தனர். அதில் 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 962 ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோதனை நடத்துவதை ஒட்டி அவரது வீட்டு முன்பு போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.