தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில ரயில்கள் நிற்க வேண்டும்: டி.ஆர். பாலு!

சென்னையில் மூன்றாவது ரயில் நிலையமான தாம்பரத்தில் முக்கிய ரயில்களை நிறுத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே துறை குழுத் தலைவருக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார்.

தலைநகர் சென்னையில் உள்ள மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று தாம்பரம் ஆகும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் பல இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. ஆனால் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் நிற்காமல் செல்கின்றன. எனவே அந்த ரயில்களையும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு திமுக எம்.பி. டிஆர். பாலு வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கடிதம் ஒன்றை ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற குழுத் தலைவர் சி.எம். ரமேசிற்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், “சென்னையின் மூன்றாவது முனையமான தாம்பரம் ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்களை நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி – புதுச்சேரி, புவனேஸ்வர்- புதுச்சேரி, புவனேஸ்வர் – ராமேஸ்வரம், பனாரஸ் – ராமேஸ்வரம், பிரோஸ்பூர் ராமேஸ்வரம், அயோத்தியா – ராமேஸ்வரம் ஆகிய ரயில்களை தாம்பரத்தில் நிறுத்த அனுமதிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.