காவல்துறையை ஒரு மாதம் என்னிடம் கொடுத்தால் கஞ்சாவை ஒழித்துக் காட்டுவேன்: அன்புமணி!

காவல்துறையின் கட்டுப்பாட்டை ஒரு மாதம் தன்னிடம் கொடுத்தால் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாக ஒழித்துக்காட்டுவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நதிக்கரை விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 18ம் ஆண்டு வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் 85 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக இருக்க வேண்டும் எனவும், தமிழகத்தின் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பின் 25 சதவீதத்தை வேளாண் பட்ஜெட் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியறுத்தினார்.

மேலும் நெல் கொள்முதல் விலை குண்டாளுக்கு 3500, கரும்புக்கு டன்னுக்கு 5000 ரூபாயாகவும் உயர்த்தப்பட வேண்டும் என்றும், வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்றும், நியாய விலை கடைகளில் நாட்டுச் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் விலங்குகள் தாக்கி ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வலியுறுத்திய அன்புமணி ராமதாஸ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, கஞ்சா ஒழிப்பு, கள்ளச்சாரத்தை ஒழிப்பது என காவல்துறை இன்று தன் வேலைகளை விட்டுவிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களை துன்புறுத்துவது, பொய் வழக்குகள் போடுவது என செயல்படுகிறது என சாடினார்.

கடந்த மாதத்தில் எத்தனையோ பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள் என்று கூறிய அன்புமணி ராமதாஸ், பள்ளிகளில், கல்லூரிகளில் குழந்தைகள், பெண்கள் ஐந்து வயது, ஏழு வயது என பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், இது பற்றி கேட்டால் இது தனிப்பட்ட சம்பவம் என காவல்துறை விளக்கம் கொடுக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் அவன் கதை முடிந்தது என்ற பயம் ஏற்படும் வகையில் காவல்துறை செயல்பட வேண்டும் என்றும் தவறு செய்வதற்கு காரணம் போதை பொருள்கள் தான், கஞ்சா புழக்கம் தமிழக முழுவதும் பரவி கிடக்கிறது என்றும் அன்புமணி விமர்சித்தார். காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது? ஏன் கஞ்சாவை ஒழிக்க முடியவில்லை? என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். மேலும் என்னிடம் ஒரு மாதத்திற்கு காவல்துறையின் கண்ட்ரோலை கொடுங்கள் கஞ்சாவை முழுமையாக ஒழித்துக் காட்டுகிறேன் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், தொகுதி மறு வரையறை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வருவதாக தாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 30 சதவீதம் உயர்த்தினால் தமிழகத்திலும் 30% உயர்த்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை தமிழகத்தில் குறையாது என வாக்குறுதி கொடுத்துவிட்டு வேறொரு மாநிலத்தில் உயர்த்தினால் அதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து “What bro,very wrong bro”.. என விஜய் பேசியது குறித்து செய்தியளார் எழுப்பிய கேள்விக்கு “Sorry bro .. Next question bro” என அன்புமணி ராமதாஸ் பதில் அளித்தார்.