நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்த உள்ள அனைத்துக் கட்சித் கூட்டத்தில் அமமுக பங்கேற்கும் என்று டிடிவி.தினகரன் கூறினார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்த உள்ள அனைத்துக் கட்சித் கூட்டத்தில் அமமுக பங்கேற்கும். தமிழக சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அதிமுகதான். ஆனால், மக்கள் மன்றத்தில் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? திமுகவுக்கு பயந்து கொண்டு பழனிசாமி அடக்கி வாசிக்கிறார்.
நீதிமன்ற உத்தரவுப்படிதான் சீமான் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அரசு அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசிய திமுக மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளின் எண்ணத்தையும், மனோபாவத்தையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.