சிலை கடத்தல் வழக்கில் சாட்சிகளை மிரட்டி வருவதால் ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலின் முன்ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியை, தப்பிக்க வைக்க முயன்றதாக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காதர்பாட்ஷா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பொன் மாணிக்கவேல் மீதான புகார் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கை நகல் கேட்டு பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை தவிர்த்து வேறு ஆவணங்களின் நகல் கோர முடியாது என உத்தரவிட்டது. இதை ரத்து செய்து சிபிஐ முதல் கட்ட விசாரணை அறிக்கை நகல் வழங்க உத்தரவிட வேண்டும் என பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. முதல் கட்ட விசாரணையின் போது மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கண்டறியப்பட்டது. சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி சுபாஷ் சந்திர போஸ் என்பவரை காப்பாற்றும் நோக்கில் பொன்மாணிக்கவேல் செயல்பட்டுள்ளார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகளை மீறி பொன். மாணிக்கவேல் தற்போது சாட்சிகளை மிரட்டி வருகிறார். எனவே, அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை சிபிஐ தொடங்கியுள்ளது. இதனால் பொன். மாணிக்கவேலுக்கு முதல் கட்ட விசாரணை அறிக்கை வழங்க முடியாது. அவருக்கு விசாரணை அறிக்கை வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும்” எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, நீதிமன்றத்தால் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் மீது எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தீர்கள் என கேள்வி எழுப்பினர். பின்னர் விசாரணை ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்தது. பின்னர் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.