“தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் அதற்கான எந்தப் பணியும் நடக்காத நிலையில் தமிழகத்துக்கு தொகுதிகள் குறையும் என்று உத்தேசமாக நினைப்பதும், கூறுவதும் ஏற்புடையதல்ல” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு நடவடிக்கைகளை, பணிகளை மேற்கொள்ளும் போது தமிழகத்துக்கு அதிகப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்துக்கும், பொது மக்களுக்கும் மாற்றுக்கருத்துக் கிடையாது. அப்படி ஒரு அதிகாரப்பூர்வமான முடிவை மத்திய அரசு எடுக்கும்போது விதிகள் வகுக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து அதற்கான சட்டத்திருத்தங்கள், கோட்பாடுகள் மட்டுமல்லாமல் குழு அமைத்து வரையறை செய்ய ஏற்பாடு செய்யப்படும். எனவே தமிழகத்தின் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஒத்த கருத்தே. அதே நேரத்தில் மத்திய அரசு எந்த அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் அதற்கான எந்தப் பணியும் நடக்காத நிலையில் தமிழகத்துக்கு தொகுதிகள் குறையும் என்று உத்தேசமாக நினைப்பதும், கூறுவதும் ஏற்புடையதல்ல.
குறிப்பாக இந்தப் பிரச்சினையை உறுதியாக அணுக வேண்டுமே தவிர உத்தேசத்தின் அடிப்படையில் அணுகக்கூடாது. எனவே தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) உறுதியாக இருப்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.