சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இசையமைப்பாளர் இளையராஜாவை இன்று(மார்ச் 5) சந்தித்தார்.
இது குறித்து அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு. ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா, “வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளது. இதனை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய இணையமைச்சர் எல். முருகனும் சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜாவை சந்தித்து வாழ்த்தியுள்ளார். எல். முருகன தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்த் திரை இசைக் கலைஞர், இசைஞானி இளையராஜாவை இன்று நேரில் சந்தித்து, வருகின்ற 8-ஆம் தேதி லண்டன் நகரில் அவர் அரங்கேற்றம் செய்கின்ற ‘சிம்பொனி’ இசை நிகழ்ச்சி வெற்றி பெற வேண்டி வாழ்த்து தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.