நிலத்தடி நீருக்கு கட்டணம் என்ற மத்திய அரசின் திட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது!

நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துபவர்கள் கட்டயாம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு, இண்டஸ்டரியல், மொத்த தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள், குரூப் ஹவுசிங் சொசைடிகள், குடியிருப்பு அபார்ட்மென்ட்களுக்கான குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாட்டு உள்ளிட்ட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துவர்கள், தற்போது அல்லது புதிய நீலத்தடி நீர் பயன்பாட்டளர்கள் ஜூன் 30க்குள் அனுமதி பெற வேண்டும்.

செப்டம்பர் 30க்குள் பூர்த்தி அடைந்த விண்ணப்பம் சமர்பிப்பதற்கு ரூ.10 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்துவதின் பேரில் நிலத்தடி நீர் எடுப்பதை பதிவு செய்வதற்கு இதன் மூலம் தற்போதைய பயனாளிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.