இதுதான் உங்க பசங்க படிச்ச இருமொழிக் கொள்கையா?: அண்ணாமலை!

தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இருமகன்களும் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை படித்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன்கள் படித்தது இரு மொழி கல்வி திட்டமா? மும்மொழிக் கல்வித் திட்டமா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இதற்கு பதிலளித்தார். 34 அமைச்சர்களின் பசங்க எங்கு படிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. 8 கோடி மக்களுக்கு என்ன கொள்கை என்பதுதான் வாதம். எனக்கு உள்ளது இரண்டு புதல்வர்கள். அவர்கள் இருவரும் எல்கேஜி முதல் பள்ளி முடிக்கும் வரை இரட்டை மொழிக் கொள்கைதான் படித்தார்கள். கல்வித்திட்டத்தை பொறுத்தே மொழிக் கொள்கை அமைகிறது. சிபிஎஸ்சியில் 3 மொழிக் கொள்கை உள்ளது. என் மகன் படித்த சர்வதேச கல்வியில் இரண்டு மொழிதான் உள்ளது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் படிப்பதில் தவறு இல்லை. இந்தியை பரப்பும் தக்‌ஷிண்பாரத் இந்தி பிரச்சார சபா மத்திய அரசின் நிதி உடன் இந்தியை பரப்பி வருகிறது. இருக்கும் கல்வியை கெடுக்கும் அளவுக்கு இந்தியை ஏற்றுக் கொள்ள மாட்டோம். என்றைக்கும் இரட்டை மொழிக் கொள்கைதான் என பேசி இருந்தார்.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலளித்து உள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் திரு.பிடிஆர் அவர்கள் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.

அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம். இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ்
இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? வெளங்கிடும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதை் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?

அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.