2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான்: தமிழிசை சௌந்தரராஜன்!

2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தனை பார்ப்பதற்காக வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

நீளமான பட்ஜெட்.. வெற்று பட்ஜெட்.. தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாத பட்ஜெட். முன்னேற்றத்திற்கான எந்த கவனமும் செலுத்தாமல் சண்டை போடும் நோக்கத்திலேயே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிப்பாதாக குறை சொல்கிறார்கள். பட்ஜெட்டில் டெல்டா மாவட்ட மக்களின் பயனுக்காக எந்த திட்டமும் இல்லை. இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார். பெண் பாதுகாப்பிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிலிண்ட்ருக்கு நூறு ரூபாய் மானியம் கொடுக்கப்படும் என்றார்கள். அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு எந்த நிதியும் இதுவரை ஒதுக்கவில்லை.

மகளிர் உதவி தொகை விண்ணப்பித்தவர்களுக்கு கொடுக்கப்படும் என தமிழக அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே 2500 வழங்கியது. பெண்களின் பயணத்திற்கு இலவச என்பது மட்டும் முன்னேற்றத்திற்கு வழிவகையாக இருக்காது. ஏதோ பெண்களுக்கு கொஞ்சம் இலவசம் கொடுத்தால் வாழ்வாதாரம் மேம்படும் என நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் மேம்படுவதற்கான திட்டம் எதுவும் இல்லை.

பென்ஷன் திட்டம் குறித்து எந்த திட்டமும் இல்லை, மின் கட்டண உயர்வு குறித்து எந்த திட்டமும் இல்லை. எதுவுமே இல்லாத ஒரு பட்ஜெட் இது. 2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான். விளம்பர நோக்கில், வெற்று அரசு நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த வெற்று நிதி நிலை அறிக்கை உணர்த்தியுள்ளது. இது ஒரு வெற்று பட்ஜெட். இவ்வாறு அவர் கூறினார்.