உத்தரப் பிரதேசம், பீகாரில் இந்தியை முதலில் ஒழுங்காக சொல்லி தருகிறீர்களா?: பழனிவேல் தியாகராஜன்!

மும்மொழி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் முதலில் இந்தி ஒழுங்காக கற்பிக்கப்படுகிறதா?” என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.

மும்மொழிக்கொள்கையை வலியுறுத்தும் புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் ஒரு செய்தி ஊடகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் தமிழ்நாடு ஏன் மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறது என்று விளக்கியிருந்தார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் எனில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் முன்னேற வேண்டும். ஏழைகளும், அதிக மக்கள் தொகையும் வட மாநிலங்களில்தான் இருக்கின்றனர். எனவே இந்த மாநிலங்களில் தனிநபர் வருமானம் சுருங்கியிருக்கிறது. இதை மேம்படுத்தாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. இந்தியாவுக்கு எதிர்காலமே இல்லை. தற்போது மத்தியிலிருக்கும் அரசு முதன் முறையாக ஆட்சிக்கு வந்தபோது வரி பகிர்வில் தமிழகத்திற்கு 1 ரூபாய் கொடுத்தது. ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு 2.90 ரூபாய் கொடுத்தது. 2024 வரை கூட இந்த வரி பகிர்வில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்று தமிழ்நாட்டிற்கு 1 ரூபாயும், உ.பிக்கு 4.35 ரூபாயும் கிடைக்கிறது. இவ்வளவு கொட்டி கொடுத்தாலும் தமிழ்நாட்டை விட உத்தரப் பிரதேசத்தில் தனிநபர் வருமானம் குறைவாகத்தான் இருக்கிறது.

நாங்கள் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், அங்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. அப்படியெனில் சமத்துவம் எப்படி உருவாகும்? வட மாநிலங்களில என்ன பிரச்சனை இருக்கிறது? ஏன் எவ்வளவு கொடுத்தாலும் வளர்ச்சி ஏற்படவில்லை? பிரச்சனையின் அடித்தளம் எது? என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து அதை சரி செய்திருக்க வேண்டும். ஆனால், அதை தவிர்த்து.. தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களை அச்சுறுத்துவதும், நிதியை கொடுக்க மறுப்பதும் சரியானது அல்ல.

புதிய கல்விக்கொள்கையை பொறுத்த அளவில், தமிழ்நாடு இதனை அமல்படுத்துவது பிரச்சனை அல்ல. மாறாக, உத்தரப் பிரதேசமும், பிகாரும் அவர்களின் மொழியான இந்தியை எந்த அளவுக்கு சிறப்பாக கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்? கல்வி தரத்தை மேம்படுத்தியிருக்கிறாார்களா? என்பதே இப்பொதைய கேள்வியாக இருக்கிறது. பள்ளிகளை எப்படி நடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு டெல்லி ஆர்டர் போட முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.