கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறியதாவது:-
கோடைக் காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலை ஏற்படலாம். எந்தத் தடையும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 78,000 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரத் துறையில் காலியாகவுள்ள அவசியமான பணியிடங்கள் விரைவில் நிரப்படும். 2030-க்குள் மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதத்திற்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.