“வங்கதேச ஊடுவல்காரர்கள், ரோஹிங்கியாக்களுக்கு இரக்கம் காட்டி, அவர்களை ஊடுருவச் செய்கிறது மேற்குவங்க அரசு’’ என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:-
நாட்டின் பாதுகாப்புக்கும், வெளிநாட்டினர்களின் வருகையை கண்காணிப்பதற்கும் கடுமையான குடியுரிமை சட்டங்கள் அவசியம். வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கும், ரோஹிங்கியாக்களுக்கும் மேற்குவங்க அரசு இரக்கம் காட்டுகிறது. வங்கதேச எல்லையில் 450 கி.மீ தூரத்துக்கு வேலி அமைக்க மேற்கு வங்க அரசு நிலம் அளிக்காததால், அந்தப்பணி நிலுவையில் உள்ளது. வேலி அமைக்கும் பணிகள் நடைபெறும்போதெல்லாம், ஆளும் கட்சி தொண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு மத கோஷம் எழுப்புகின்றனர்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு அடையாள ஆவணங்களை மேற்கு வங்க அரசு வழங்குகிறது. அவர்கள் ஆதார் அடையாள அட்டை பெற்று டெல்லிக்கு வாக்காளர் அடையாளர் அட்டையுடன் வருகின்றனர். பிடிபட்ட வங்கதேசத்தினர் எல்லாம் மேற்கு வங்கத்தின் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இருந்து ஆதார் அட்டைகளை பெற்றுள்ளனர். மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு பா.ஜ ஆட்சி அமைக்கும்போது, இப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.