பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின்!

‘ஆல்ட் நியூஸ்’ இணையதள இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக ‘ஆல்ட் நியூஸ்’ செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜுபைர் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, 2018 ஆம் ஆண்டு முகமது ஜுபைர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்குரியை வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் முகமது ஜுபைரை கடந்த மாதம் 28 ஆம் தேதி கைது செய்தனர். அவரை டெல்லி திகார் சிறையில் போலீசார் அடைத்தனர். அதே நேரம், மத உணர்வை புண்படுத்தியதாக ஜுபைர் மீது கடந்த 1 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 4 ஆம் தேதி திகார் சிறையில் இருந்து ஜுபைர் சீதாபூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், சீதாபூர் மாவட்டத்தில் பதியப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி முகமது ஜுபைர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், முகமது ஜுபைருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக ட்விட்டரில் எந்த வித பதிவுகளையும் ஜுபைர் பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. ஆனால், இந்த ஜாமின் உத்தரவு டெல்லி போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டெல்லி போலீசார் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஜுபைர் சிறையில் உள்ளதால் இந்த வழக்கில் ஜாமின் கிடைத்த போதும் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.