பண மோசடி வழக்கில் ஆம்னெஸ்டி இந்தியா மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு பதிவு!

பண மோசடி வழக்கில் ஆம்னெஸ்டி இந்தியா அமைப்பு மற்றும் அதன் தொடா்புடைய அமைப்புகளுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியதாவது:-

ஆம்னெஸ்டி இண்டா்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட், (ஏஐஐபிஎல்), இந்தியன்ஸ் ஃபாா் ஆம்னெஸ்டி இண்டா்நேஷனல் டிரஸ்ட் (ஐஏஐடி) மற்றும் அதன் தொடா்புடைய இதர அமைப்புகளுக்கு எதிராக பெங்களூரு நகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் புகாா் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டுள்ளவா்களுக்கு எதிராக சம்மன் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக நிதியைப் பெற்றதாக ஆம்னெஸ்டி நிறுவனத்தின் மீது புகாா் எழுந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக முதன் முதலில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதையடுத்து, அமலாக்கத் துறை வெளிநாட்டு நிதி பங்களிப்பிற்கான ஒழுங்காற்று விதமுறைகளை மீறியதாக அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தது. அதில், பிரிட்டனில் செயல்பட்டு வரும் ஆம்னெஸ்டி இண்டா்நேஷனல் அமைப்பிடமிருந்து சட்டத்துக்குப் புறம்பாக நிதி பெறும் நோக்கில் இரண்டு புதிய நிறுவனங்களை (ஏஐஐபிஎல் மற்றும் ஐஏஐடி) ஆம்னெஸ்டி இண்டா்நேஷனல் இந்தியா பவுண்டேஷன் (ஏஐஐஎஃப்டி) தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்துக்கும், அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அகாா் படேலுக்கும் ரூ.61.72 கோடி அபராதத்துக்கான விளக்கம் கேட்பு நோட்டீஸை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை அனுப்பியது. இந்த நிலையில், தற்போது பண மோசடி வழக்கில் ஆம்னெஸ்டி இந்தியா அமைப்பு மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.