அம்பேத்கரின் போராட்டங்கள் நம்மை வழிநடத்தும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், “நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், ஒவ்வொரு இந்தியரின் சம உரிமைகளுக்காகவும், ஒவ்வொரு பிரிவினரின் பங்கேற்புக்காகவும் அம்பேத்கர் ஆற்றிய போராட்டமும் பங்களிப்பும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் எப்போதும் நம்மை வழிநடத்தும்” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், ”இந்திய விடுதலைக்குக் காரணமான, அனைத்து இந்தியர்களின் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காகப் போராடிய நமது உத்வேகத்துக்குக் காரணமான, நாட்டின் கட்டுமானத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய சிறந்த தொலைநோக்கு பார்வையாளரான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி – பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளில், அவருக்கு எங்கள் மிகவும் பணிவான அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.