என்சிஇஆர்டி தொடங்கி எம்.பி.க்கள் கடிதம் வரை எதிலும் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி.!

“என்.சி.இ.ஆர்.டி தொடங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு” என சு.வெங்கடேசன் எம்.பி மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஆங்கில வழி பாடப்புத்தகங்களில் இந்தி தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கேரள அமைச்சர் வி. சிவன்குட்டி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஆங்கில வழி பாடப்புத்தகங்களுக்கு இந்தி தலைப்புகளைப் பயன்படுத்துவதற்கான முடிவை விமர்சித்திருந்தார். அதில் அவர், “மத்திய அரசின் இந்த முடிவு ஒரு கடுமையான பகுத்தறிவின்மை மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையைக் குறைக்கும் கலாச்சாரத் திணிப்பு. இந்த முடிவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.” என்று கண்டித்திருந்தார்.

இதனை மேற்கோள்காட்டி, சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி துவங்கி எம்.பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.