தமிழகத்தில் 6 மாதத்தில் 25,000 பேருக்கு எச்ஐவி: மா.சுப்ரமணியன்!

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழகத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 908 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 25,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி, எச்ஐவி நோய் தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது பேசிய தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 908 நபர்கள் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்காக 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எச்ஐவி தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டம் எதுவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் செயல்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில் எச்ஐவி பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை 1.81 கோடி ரூபாய் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக செலவிடப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 908 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டில் 25,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எச்ஐவி தொற்றாளர்களின் குழந்தைகளின் கல்வி மருத்துவ செலவுக்காக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 5 கோடி ரூபாய் நிதியை வைப்பு நிதியாக கொடுத்தார், அந்த நிதி தற்போது 25 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது, அந்த நிதியின் மூலம் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 18க்கு வயதுக்கு உட்பட்ட 7618 குழந்தைகளின் கல்வி மருத்துவச் செலவுக்கு 1.81 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கல்விக்கும் நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவைப் பொறுத்தவரை 1980-90 காலகட்டங்களில் எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டது. அதற்குப் பிறகு பெரிய அளவில் அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆரம்பித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதன் மூலம் பள்ளி கல்லூரிகள், லாரி ஓட்டுனர்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு நிலையில் எச்ஐவி பாதிப்பு வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் வெறும் ஆறு மாதத்தில் 25 ஆயிரம் பேருக்கு பாதிப்பு இருப்பது என அமைச்சர் கூறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசின் முயற்சியால் எச்ஐவி பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருவது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.