தமிழகத்தில் 1 லட்சத்து 55,992 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சென்னை அண்ணா நகரில் கூடுதலாக ஒரு ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பதிலளித்து பேசும்போது, டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலமாகவும் கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவும் மொத்தம் 1 லட்சத்து 55,992 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகளில், ஈரோடு மாவட்டம், பவானி சாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையம் வழங்கும் பயிற்சித் திட்டங்களை பதிவு செய்யப்பட்ட காணொலிகள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் அந்த நிறுவனத்திற்கென CSTI சேனல் என்ற பெயரில் ஒரு புதிய “காணாெலி பகிர்வுதளம்” (Video Sharing Platform) தொடங்கப்படும்.
இது அந்த நிறுவனத்தில் நடத்தப்படும் விரிவுரைகள், வகுப்புகள் ஆகியவற்றின் நிரந்தர தகவல் களஞ்சியமாக இருக்கும். மேலும், இது பொது நிர்வாகம் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளையும், அரசு நலத்திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களையும் அறிந்து கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு பொதுநூலகமாக விளங்கும்.
பொதுப்பணிகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை மேற்கொள்ள ஒருங்கிணைந்த தனித்த வலைதளம் உருவாக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் இளைஞர்களின் நலன் கருதி, கூடுதலாக சென்னை அண்ணா நகரில் நவீன வசதிகளுடன் ஒரு அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படும்.
ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் தொடர்பாக பொதுமக்கள் தடையின்றி கட்டணமில்லா தொலைேபேசி மூலம் எளிதாக புகார் அளிக்க வசதியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மையம் முதல்வரின் முகவரி துறையின்கீழ் ரூ.53.75 லட்சத்தில் அமைக்கப்படும். இவை உள்ளிட்ட 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.